Login Form
Invite Friends
| மூன்று அதிசயப் பொருட்கள் (6) |
|
|
|
| Written by kalvithulir |
| Tuesday, 31 January 2012 17:56 |
|
காதலின் வலிமை
இளவரசன் கமரைப் பார்த்த அரசன், ''அன்பு மகனே! நீ இல்லாமல் நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டோம் தெரியுமா? இனி நீ எங்களைப் பிரியக் கூடாது'' என்று கண்ணீர் விட்டு அழுதார்.
மயக்கம் தெளிந்த தங்கையர் மூவரும், ஆமாம் ''அண்ணா! எப்பொழுதும் விருந்தும் கொண்டாட்டமுமாக இருக்கும் நம் அரண்மனை நீ சென்றதிலிருந்து எங்கும் அழுகையும் ஒப்பாரியும் தான் கேட்டது'' என்றார்கள்.
''நான்தான் உயிருடன் வந்து விட்டேனே, இனி உங்களைப் பிரிய மாட்டேன்'' என்ற அவன் நடந்ததை எல்லாம் சொன்னான். அவர்களும் ஆர்வத்துடன் கேட்டார்கள்.
''தந்தையே! பறக்கும் குதிரையைக் கொண்டு வந்த காபூல் கிழவர் என்ன ஆனார்?'' என்று கேட்டான்.
''மகனே! அந்தக் கொடியவனால்தான் நமக்கு இவ்வளவு துன்பங்கள் நேர்ந்தன. அவனை உதைத்துச் சிறையில் அடைத்து உள்ளேன். அங்கே அவன் துன்பப்பட்டுக் கொண்டிருப்பான்.
''தந்தையே! அறிஞர்களை நாம் மதிக்க வேண்டும். பறக்கும் குதிரை அருமையான கண்டுபிடிப்பு. அதை உருவாக்கிய அவரைச் சிறையில் இருந்து விடுவியுங்கள். ஏராளமான பரிசுகள் தந்து அவரைப் பெருமைப்படுத்துங்கள். அப்படியே செய்கிறேன்'' என்றார் அரசர். காபூல் சிறையிலிருந்து விடுதலை ஆனான்.
''தவறு நேர்ந்து விட்டதற்காக வருந்துகிறேன். இனி நீங்கள் சீரும் சிறப்புமாக இங்கே இருக்கலாம்'' என்ற அரசன், அவனுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கினார்.
இளவரசியைத் திருமணம் செய்து வைப்பதைப் பற்றிப் பேசவில்லையே, கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டாரே. அரும்பாடுபட்டு உருவாக்கிய பறக்கும் குதிரையையும் இழந்து விட்டேனே. அதன் இயக்கங்கள் அனைத்தையும் இளவரசன் தெரிந்து கொண்டு விட்டானே. எல்லாவற்றுக்கும் சேர்த்து இவர்களைப் பழி வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதற்காக காத்திருப்பேன் என்று தனக்குள் குமுறினான் கிழவன்.
அந்தப்புரம் வந்த அரசன் இளவரசன் கமரிடம் ,"இனி நீ எங்களைப் பிரியக் கூடாது. பறக்கும் குதிரையின் அருகே செல்லக்கூடாது'' என்றான். ஓரிரு நாட்கள் சென்றன. இளவரசி நகார் நினைவாகவே இருந்தான் கமர். எங்கு பார்த்தாலும் அவளின் முகமே தோன்றியது. அவனால் தூங்க முடியவில்லை. எந்த வேலையையும் ஈடுபாடுடன் செய்ய முடியவில்லை.
காதலின் வலிமை அவனுக்குப் புரிய தொடங்கியது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற துடிதுடிப்பு ஏற்பட்டது. அவள் இல்லாமல் தனக்கு வாழ்வு இல்லை என்பதை உணர்ந்தான். பறக்கும் குதிரையில் அமர்ந்தான் அவன். சானா நாட்டை நோக்கிப் பறக்கத் தொடங்கினான். பொழுது விடிந்தது. இளவரசன் காணாமல் போனதை அறிந்தான் அரசன். பறக்கும் குதிரையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. பதறிய அவன் இளவரசன் திரும்பியதும் அந்தக் குதிரையை உடைத்து எரிய வேண்டும் என்று முடிவு செய்தான்.
குதிரையில் பறந்த இளவரசன் இரவு நேரத்தில் சானா நாட்டை அடைந்தான். முன்பு செய்தது போலவே இளவரசி நகாரின் அந்தப்புர மேல் தளத்தில் குதிரையை இறக்கினான். ஓசை ஏதும் எழுப்பாமல் கீழே இறங்கி வந்தான். வழக்கம் போல நீக்ரோ அடிமை குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கடந்து இளவரசியின் கட்டிலை நெருங்கினான். பேச்சுக் குரல் கேட்டு அப்படியே நின்றான். என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தான். இளவரசி அழுது புலம்பும் குரல் அவனுக்குக் கேட்டது, பணிப்பெண்கள் ஆறுதல் சொன்னார்கள்.
''காதலர் உங்களுக்காகக் கவலைப்படுவதாக தெரியவில்லை. நீங்கள் ஏன் அவரை நினைத்து நினைத்து அழுது புலம்புகிறீர்கள்? உண்ணாமல் உறங்காமல் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். அவரை மறந்து விடுங்கள்'' என்றாள் ஒருத்தி.
''முட்டாள்களே! என் உயிரினும் மேலான காதலர் என்னை மறந்து இருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? அவரால் என்னை மறக்க இயலாது. இங்கு வந்து விடுவார்'' என்று அழத் தொடங்கினாள் அவள்.
இதைக் கேட்ட இளவரசனின் உள்ளம் துடித்தது. விரைந்து சென்று கட்டிலின் திரையை விலக்கினான்.
''அன்பே! வந்து விட்டேன். உன்னைப் பிரிந்து என்னால் மட்டும் இருக்க முடியுமா? என்று உணர்ச்சிப் பொங்கச் சொன்னான். தலை நிமிர்ந்து பார்த்தாள் அவள். காதலனைக் கண்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்தாள். எழுந்த அவள் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். அவன் மார்பில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். இனி நீங்கள் என்னைப் பிரிந்து செல்லக்கூடாது. அப்படிப் பிரிந்தால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று புலம்பினாள்.
''அன்பே! அழாதே! நான் தான் வந்துவிட்டேனே. இனி உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்'' என்றான் அவன்.
''பணிப் பெண்களே! என் காதலர் உண்பதற்கு உணவு வகைகளைக் கொண்டு வாருங்கள்'' என்றாள். அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. பொழுது விடிய தொடங்கியது.
''ஐயோ! பொழுது விடிய போகிறதே. என் தந்தை உங்களைப் பார்த்து விட்டால் ஆபத்து ஏற்படுமே, என்ன செய்வது என்றாள் அவள். நான் சொல்வதை நீ செய்தால் போதும். நாம் பிரிந்து இருக்கவேண்டாம்'' என்றான் அவன். உங்களுடன் சேர்ந்து இருப்பதற்காக நான் எதையும் செய்வேன் என்றாள் அவள். அப்படியானால் என்னுடன் புறப்படு என்றான் அவன். (தொடரும்) |
| Last Updated on Tuesday, 31 January 2012 18:13 |



